bsnleu
welcome
Monday, 7 August 2017
Sunday, 6 August 2017
ஊதிய மாற்ற குழுவின் தற்போதைய நிலை...
அருமைத் தோழர்களே ! . . .
3வது ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்க DPE கடிதம் கொடுத்துவிட்டது. 3வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை எந்த விதமான மாற்றமும் இன்றி 19.07.17 அன்று ஏற்றுக்கொண்ட அமைச்சரவை முடிவை ஒட்டி இக்கடிதம் வெளியிடப்பட்டது. இந்தக்கடிதத்தின்படி BSNL ஊழியர்கள் ஊதிய மாற்றத்திற்கு தகுதி உடையவர்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அமைச்சரும் அரசாங்கமும், BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் தருவதற்கு சாதகமாக உள்ளனர் என சங்கங்களும், BSNLலில் உள்ள உயர் மட்ட அதிகாரிகளும் பரப்பிவந்த வதந்திகளை இந்தக்கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் விரைவில் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள்.
பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றம்
01/01/2017 முதல் அமுல்படுத்தப்படுகின்றது.
இதற்கான ஒப்புதலை
DPE 03/08/2017 அன்று வெளியிட்டுள்ளது. நிறுவனங்களின் ஊதிய செலவினத்தைப் பொறுத்து 15 சதம் 10 சதம் 5 சதம் என ஊதிய நிர்ணயம் செய்யப்படும். தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளுக்கு இது பொருந்தாது.
குறைந்த பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.30000/-ஆகும்.
அதிக பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.2,00,000/-ஆகும்.
நமது BSNL நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதால் நமக்கு ஊதிய மாற்றத்திற்கான வாய்ப்பில்லை. ஊதிய மாற்றத்தோடு செலவினத்தை முடிச்சுப்போடும் அரசின் நியாயமற்ற செயலை எதிர்த்து நாம் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறுவழியில்லை. . .
ஆகஸ்ட்-6,ஹிரோஷிமா, நாகாஷி நினைவு தினம்...

ஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது.
அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy) என்பதாகும்
மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘குண்டு மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டினர்.
இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.
சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர்.
‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.
அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னது குறிப்பிடத்தக்கது..
Wednesday, 2 August 2017
ரயில்வே துறை தனியாருக்குத் தாரை வார்ப்பு -தபன்சென் கண்டனம்.
புதுதில்லி, ஆக.1-
ரயில்வேதுறையை மத்திய அரசாங்கம் படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனைக் கண்டிக்கின்றோம். இவ்வாறு தனியாருக்குத் தாரை வார்க்கும் செயல்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளருமான தபன் சென் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன் சென் பேசியதாவது:
அடுத்ததாக, நாட்டில் உள்ள 407 ரயில் நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைத்திட இருக்கின்றனர். பல்வேறு மெட்ரோ நகரங்களில் உள்ள 23 ரயில் நிலையங்கள் ஏற்கனவே இதற்காக இறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. டெண்டர்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. டெண்டரில் உள்ள நிபந்தனைகளின்படி இவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கும் ரயில் நிலையங்களில் பணியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதற்கான நடவடிக்கைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
அடுத்ததாக, ரயில்வே வளர்ச்சி அதிகாரக்குழுமம் (ரயில்வே டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) என்னும் ஓர் அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பணி என்ன தெரியுமா? இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள ரயில்வே பாதைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதுதான். இது முதலாவதாகும். இரண்டாவதாக, ரயில்வே பயணிகள் கட்டணங்கள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உற்பத்திச்செலவினத்தின் அடிப்படையில் (cost
basis) இனி அமைந்திடும். மானியங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். தற்சமயம் ரயில்வே கட்டணங்களில் 47 சதவீத அளவிற்கு மானியத் தொகை இருக்கிறது. எனவே அரசின் புதிய கட்டணங்கள் செயல்படுத்தப்பட்டால் இப்போதுள்ள கட்டணங்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். இவை மக்கள் மீதான சுமைகளாகும். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர், ‘இந்தியாவின் உற்பத்தி செய்வதற்குப்’ பதிலாக, இந்தியாவை முற்றிலுமாக அழித்திடும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். இது மிகவும் மோசமான தேச விரோத நடவடிக்கையாகும். இவை அனைத்தையும் தவிர்த்திட வேண்டும் என்று இந்த அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், நாட்டு மக்கள் தங்கள் ஒற்றுமை பலத்தின் மூலமாக இந்த நாசகர நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவார்கள்.
அரசின் இந்த ஊழியர்விரோத, தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக,
ஏற்கனவே ரயில்வே ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் போராட்டப்பாதையில் அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள். ஆயினும் அரசாங்கம் தேசபக்த முழக்கத்தைச் சொல்லிக்கொண்டே இவ்வாறு தேச விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவை மக்களை மோசடியான முறையில் வஞ்சிக்கும் செயலாகும். அரசின் இந்த நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவைகளாகும். இவற்றை இந்த அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு தபன்சென் கூறினார். தபன்சென் கோரிக்கையோடு ஜெயா பச்சன், வீரேந்திரகுமார், சி.பி.நாராயணன், து.ராஜா முதலானவர்களும் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.
Tuesday, 1 August 2017
தொழிலதிபர் தவறவிட்ட அரைகிலோ தங்கம் காவல்துறையிடம் ஒப்படைத்த CITU ஆட்டோ தொழிலாளி...
கோவை, ஜூலை 31-
60 சரவன் தங்கத்தை தவறவிட்ட தொழிலதிபரின் நகைகளை, சாலையில் கண்டெடுத்த சிஐடியு ஆட்டோ தொழிலாளி காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அனைவரின் பாராட்டுதலை பெற்றுள்ளது. கோவை காந்திபூங்காவை அடுத்த பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் முனியப்பன். ஆட்டோ தொழிலாளியான இவருக்கு மணிமேகலை என்கிற மனைவியும், அஜித் என்ற மகனும், ஜஸ்வர்யா என்கிற மகளும் உள்ளனர். சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள ஸ்டேன்டில் வண்டியை நிறுத்தி வாடகை ஏற்றி வருகிறார். இந்நிலையில் திங்களன்று காலை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் மஞ்சப்பை ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்தபோது, அதில் தங்க நாணயங்கள் மற்றும் ஏராளமான நகைகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.முத்துக்குமார், கிளைத் தலைவர் அமல்ராஜ் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தங்க நகைகளை ஒப்படைத்தார். முன்னதாக, கோவையில் மொத்த புத்தக வியாபாரம் செய்துவரும் தொழிலதிபர் சுவாமிநாதன் என்பவர் திங்களன்று தனது மேலாளர் பழனிச்சாமியிடம் 20 தங்கநாணயங்கள் மற்றும் நகைகள் என மொத்தம் 60 சவரன் (அரைக்கிலோ) தங்கத்தை கொடுத்து வங்கியில் நகையை அடகுவைத்து பணத்தை பெற்று வருமாறு அனுப்பியுள்ளார். இதையடுத்து பழனிச்சாமி நகைகளை மஞ்சள் பையில் சுற்றி வைத்து, தனது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கில் வைத்து வங்கிக்கு சென்ற வழியில் நகைகளை தவறவிட்டுள்ளார். வங்கிக்கு சென்ற பின்னர், வாகனத்தில் வைத்திருந்த நகைப்பை காணாமல்போனது கண்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி, தனது முதலாளியிடம் தகவலை கூறி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
இதனையடுத்து நகைகளை தொலைத்தவர்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்த காவல் ஆணையர் அமல்ராஜ், தொலைக்கப்பட்ட நகைகள் தொடர்பான அடையாளங்களை சுவாமிநாதனிடம் கேட்டுள்ளார். இதில் முனியப்பன் ஒப்படைத்த நகைகளும், இவர் சொன்ன அடையாளங்களும் ஒத்துப்போனதால் அவர்களிடம் நகை பையை ஒப்படைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முனியப்பனுக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதியை அளித்து கௌரவித்தார். இதேபோல், தொழிலதிபர் சுவாமிநாதனும், ஆட்டோ ஓட்டுநர் முனியப்பனுக்கு வெகுமதியளித்து நன்றி தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)



